BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Saturday, July 26, 2008

என்னை கடந்ததொரு மேகம்


இலக்கின்றி இயங்குகின்ற இயற்கையாய் நானிருந்தேன்
கவலைகள் சுமக்காத காற்றாக நான் திரிந்தேன்
பயமின்றி மழை போல பள்ளத்துள் விழுந்தவன் நான்
வரம்பின்றி வனம் போல கண்டபடி வளர்ந்தவன் நான்

பள்ளிக்கு சாலையிலே நான் நடந்து செல்கையிலே
பட்டாம் பூச்சி கூட்டம் ஒன்று படபடத்து வந்ததடி
பட்டாம் பூச்சி கூட்டத்துள் வண்ணத்துப் பூச்சியொன்று
எனை ஈர்த்து சென்றதடி என் புருவம் உயர்ந்ததடி

நான் ரசித்த பெண்ணழகு எனை பார்த்த பொன் பொழுதில்
சுகமாய் இருந்ததென்ன என் இதயம் கரைந்ததென்ன
பார்வைப் பூ உதிர்த்துவிட்டு பூமரமே நீ கடந்தாய்
வெள்ளைத் தாள் இதயத்தில் ஓவியமே நீ படிந்தாய்

புகைப் பிடித்தால் சில நிமிடம் உற்சாகம் கிடைக்கும் என்பார்
மது குடித்தால் சிலமணிகள் சிந்தைக்குள் கிறக்கம் என்பார்
கண்மணியே உன் கருவிழிகள் என்பக்கம் திரும்பிவிட்டால்
மறுபடி நீ பார்க்கும் வரை மதுவேதும் தேவையில்லை

உன் பார்வை குளிரென்றால் கூவுகின்ற குயிலானேன்
உன் பார்வை வெயிலென்றால் மலர்கின்ற பூவானேன்
உன் பார்வை மழையென்றால் விளைகின்ற பயிரானேன்
உன் பார்வை தீயென்றால் எரிகின்ற திரியானேன்

கண்டபடி திரிந்தவனை உன் கண்ணசைவு கட்டி வைக்க
பள்ளிக்கு விடுப்பெடுக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன்
உன் பார்வை மழை என்மேலே விழக்கோரி தவம் கிடந்தேன்
சில நாள் நீ வரவில்லை உன் பார்வை வரம் தரவில்லை

நீ வாராத நாட்களில் நானாக நானில்லை
முன்போல இருப்பதற்கு என்னால் இயலவில்லை
கண்மூடி இதயத்துள் நான் பார்க்க முயலுகையில்
நேற்றைய உன் பார்வையெல்லாம் கவிதையாய் இருந்ததடி

உன் பார்வையின் சுகமென்ன எனக்கு புரிந்தது
இது தான் காதல் என் இதயம் சொன்னது
உனைப் பற்றி அறிந்ததெல்லாம் உன் பார்வை மட்டுந்தான்
தேவதையே உன் முகமும் உடலமைப்பும் மட்டுந்தான்

உனக்காக ஒரு குணத்தை நானாக உருகொடுத்தேன்
நீ பேசும் பேச்சை இதுவென்று முடிவேடுத்தேன்
ஓராயிரம் முறை உன்னை கண்களுக்குள் மணமுடித்தேன்
காதலனாய் கணவனாய் கண்களுக்குள் அடியெடுத்தேன்

வெறும் காற்றாய் இருந்தவனை இசையாக மாற்றிவிட்டாய்
பெரும்காடாய் இருந்தவனை பூங்கா ஆக்கிவிட்டாய்
எனக்குள் கவிதைகளை உன் பார்வையால் எழுதிவைத்தாய்
எனக்குள் தீபங்களை உன் கண்களால் ஏற்றி வைத்தாய்

உன்னை நான் பின் தொடர்ந்தேன் என் காதலை வெளிப்படுத்த
என் நோக்கத்தை புரிந்து கொண்டாய் முகமெல்லாம் கடுகடுக்க
என் காதலின் பிரசவத்தில் அதன் பார்வைத் தாய் இறந்தே போனாள்
நான் வரும் நேரமெல்லாம் மண்ணை பார்த்தவள் எனை மறந்தே போனாள்

உன் கண்ணோர பார்வையின்றி குருடனாய் நானானேன்
தாரகையே நீ எனைக் காண தவசியாய் நானானேன்
நீ எனைப் பார்த்து சில நாட்கள் கடந்தோடி விட்டதனால்
தேவதையே நெஞ்சுக்குள் ரகசியமாய் அழுதுவிட்டேன்

உன் மலர்விழிகள் நிலம் பார்க்க முகமெல்லாம் கடுகடுக்க
என்னை நீ கடந்து சென்றாய் எனைப் பார்க்க மறுத்துவிட்டாய்
உள் நெஞ்சில் துக்கத்துடன் முகமெல்லாம் ஏக்கத்துடன்
உன் திசை நோக்கி நின்றிருந்தேன் நீ செல்லும் வரை பார்த்திருந்தேன்....

Monday, July 21, 2008


உன்
காயங்களுக்கு
மருந்தளிக்கவே
காத்திருக்கும்...
என் கைகள்...!

நீ
மருந்தளிக்கவே
காத்திருக்கும்
என் காயங்கள்...!

Friday, July 18, 2008

உன் வார்த்தைகளில்
தொலைந்த மௌனமோ...

நீ பார்த்ததில்
கரைந்த காட்சியோ...

உன் மென்மையில்
உடைந்த பலமோ...

அல்லது
நீ மறுத்ததில்
கிடைத்த புதையலோ...

உனக்காக கிடக்கிறது
எந்தன் நெஞ்சில்!


உனக்கு தெரியாமல்
எனக்கே தெரியாமல்
பாதைகள் கூட இல்லாமல்
உன்னை நோக்கி
நான் பயணித்த வேகம்
தெரியுமா உனக்கு?



நான் பார்த்த பெண்களில்
தேவதை நீ தான்
(காதல் எனும்)
வரம் தந்தாயே...!

இனியொரு விதி செய்வோம்


நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதியது

இறைவன் அருளால் உயிர் பெற்றோம்
அவனது அன்பால் உருவுற்றோம்
சிந்தனை என்னும் திறன் பெற்றோம்
புன்னகை என்னும் வரம் பெற்றோம்

குயில்களுக்கு இசை புரியும்
நாய்களுக்கு மோப்பம் தெரியும்
மயில்கள் எல்லாம் நடனம் முயலும்
நம்மால் மட்டுமே புன்னகை இயலும்

உழைத்து சேர்ப்பதை எறும்புகள் புரியும்
தின்று கொழுப்பதை பன்றிக்கும் முடியும்
பகைவனை அழிப்பதை மிருகங்கள் செய்யும்
மனிதர்கள் நாம் நண்பர்கள் செய்வோம்

தோல்வி இன்றி இறப்பவன் சாதனையாளன்
வறுமை இன்றி இறப்பவன் உழைப்பாளி
ஆசையின்றி இறப்பவன் ஞானியாவான்
பகைவனின்றி இறப்பவன் இறைவனாவான்

ஊருக்கும் உலகுக்கும்
நண்பனாய் வாழ்ந்து நண்பனாய் இறப்போம்
நட்பை வளர்த்து நண்பர்கள் சேர்ப்போம்

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது அவசியம்
அதை விட அவசியம்
"நாளுக்கொரு நண்பனை தேடிப் பிடிப்பது"

நாளுக்கொரு நண்பனை தேடிப் பிடித்தால்
இனமோதலும் மதச் சண்டைகளும் காணாமல் போகும்

இனியொரு விதி செய்வோம்
இனியாவது ஒரு விதி செய்வோம்
"நாளுக்கொரு நண்பனை தேடிப் பிடிப்போம்"

Wednesday, July 16, 2008

நட்பெனும் நயாகரா



புன்னகையும் அறிமுகமும்
ஊற்றாக உருவெடுக்க
கேலியும் கிண்டலும்
ஆறாக பெருக்கெடுக்க
சண்டையும் பிரிவுகளும்
(நீர்)வீழ்ச்சியாய் இருந்தாலும்
நமக்குள் நட்பு
கடல் போல் விரியும்....

ஆழமாக...
அழகாக..
நிரந்தரமாக...
நிச்சயமாக...


என்ன தான் முயற்சித்தாலும்
என் ஓவியங்களில்
கொண்டு வர முடிவதில்லை
நீ அவற்றை ரசிக்கும் அழகை...!

Tuesday, July 15, 2008


உன்னை
பார்க்கும் போதெல்லாம்
என் மனம்
தொலைந்து போகிறது....

திரும்ப கிடைக்கும்
பொழுது...
உன்னை போலவே
ஒரு கவிதையுடன்..!


நான்
புகைப்பதை விடவும்
சுகமானது
நான் புகைப்பதை
நீ தடுப்பது...


உன்னை காதலிப்பதாக நான் நம்புவது
உன்னை மறக்க முடியாததால் அல்ல
மறக்க விரும்பாததால்....

Sunday, July 13, 2008



இது நாள் வரை...
நான் ரசிகன்
நம் வயது பெண்களுக்கு
நிறமுடைய பூக்களுக்கு
தொட்டுச்செல்லும் தென்றலுக்கு
தொடர்ந்து வரும் பாடலுக்கு

இப்பொழுதெல்லாம்
இவை எதுவும்
எனக்குப் பிடிக்கவில்லை
ஆனாலும் நான் ரசிகன்

நீ தந்த காதலுக்கு
தினம் உதிர்க்கும் பார்வைக்கு
மனம் உயிர்க்கும் புன்னகைக்கு
நான் காதலிக்கும் உனக்கு
உன்னை காதலிக்கும் எனக்கு


















நினைவில் தொலைந்து
கனவில் கண்டெடுத்த
கவிதை போல
பகலில் தொலைந்து
நிலவொளியில் கண்டெடுத்த
விண்மீன் போல
உனக்குள் தொலைந்து
எனக்குள் கண்டெடுத்த
என் காதல்....


உன் பார்வையிலே
பூத்த மலர்
உன் புன்னகைக்கு
வாடுதடி...



அந்த புன்னகையில் மலர்ந்தது
உன் இதழ்கள் மட்டுமல்ல
என் இதயமும் தான்...

Friday, July 11, 2008

கனவே கலையாதே

























கனவே கலையாதே
என் கண்ணுக்குள் என்றாலும்
என் கண்மணியை
என்னோடு வாழ வைத்தாய்...!

உச்சி முதல்
உள்ளங்கால் வரை
ரசிக்க வைத்தாய்
ருசிக்க வைத்தாய்
நான் தோற்ற போதெல்லாம்
என் முகம் அவள் மடி
புதைக்க வைத்தாய்
நான் வென்ற போதெல்லாம்
என்னை அவள்
அணைக்க வைத்தாய்

அவள் மடி போதுமென்று நானும்
என் தோள் பொதுமென்று அவளும்
காலமெல்லாம் வாழ வைத்தாய்

நான் காதல் கொண்ட போதெல்லாம்
அவள் வெட்கப்படுவதும்;
கோபம் கொண்ட போதெல்லாம்
என்னை அணைத்துக் கொள்வதும்
அவள் கோபம் கொண்ட போதெல்லாம்
நான் அசடு வழிவதும்
காதல் கொண்ட போதெல்லாம்
மயக்கம் கொள்வதும்
கனவே நீ எனக்கு கொட்டித் தந்தது ஏராளம்

இன்று என் கையில்
அவள் தந்த திருமண அழைப்பிதழில்
என் ஒரு தலை ராகம்
மௌன ராகமாகி விட்டது
இதற்கு ஆறுதல்
நீ மட்டும் தானே
கனவே கலையாதே




ஒரு நாள்
வாழ்ந்தாலே போதும்
உன் கூந்தல் பூவில்
வண்ணத்துப் பூச்சியாக....!


Thursday, July 10, 2008


உன்னை
படைக்கும் பொழுது
கடவுள் கடவுளில்லை
கலைஞன்...!

Wednesday, July 9, 2008

மலைச் சாலை


மலையரசியின்
வளைந்திருந்தாலும்
கலைந்திராத
கற்றைக் குழல்....!

காலைச் சூரியன்


பூமியிடம் இருந்து
முத்தத்துடன்
விடை பெற்றதால்
உடம்பெல்லாம்
உதட்டுச் சாயம்...!

நீ
பார்த்திருந்தால்
காதலில்லை...!

பார்த்திராவிட்டால்
சாதல் இல்லை...!

பார்த்தும் பார்க்காமல்
பார்க்காமல் பார்க்கிறாய்

அது தான்
கண்ணுக்குள் தூசி போல
நெஞ்சுக்குள் உறுத்துதடி...!




பறிக்கத்தான்
விதைத்தாய்
என தெரிந்திருந்தால்
நான்
காதல் பூத்திருக்க மாட்டேன்....!



Love cannot be injured further...!


நீ
பார்வையை விதைத்ததால்
வேர் பிடித்த மண்ணாய்
என் இதயம்....!

உண்ணும் உணவெல்லாம் உன் இனிப்பு
காணும் கனவெல்லாம் உன் நினைப்பு
பார்க்கும் இடமெல்லம் உன் அழகு
என் மனம் தீப் பற்றிய மெழுகு...!